சென்னை: ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்துவைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்தசுங்கத்துறை அதிகாரிகள், மத்தியபோதைப் பொருள் தடுப்பு பிரிவுபோலீஸாருக்கு ரகசிய தகவல்கொடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை கடந்த 4 மாதங்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில், இந்த கடத்தல் கும்பல், மேற்கு டெல்லியில் உள்ளபசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வருவதை அறிந்தனர். அண்மையில் அதிரடியாக அங்கு நுழைந்த போலீஸார் அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ வேதிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன்சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடிஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த மேலும் சிலர் இருப்பதும், கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. சுமார் 3,500 கிலோ வேதிப் பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்று தெரியவந்தது. கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் என பரபரப்பு தகவல் வெளியாகிஉள்ளது. அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அண்ணாமலை குற்றச்சாட்டு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்துகொண்டு போதைப் பொருள்கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் அரசு உடனே கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்,கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டஅனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.