கோவை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, கோவையில் நடைபெற்று வரும் சண்டிகருக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் வீரர் ஜெகதீசன் முச்சதம் விளாசினார்.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில், தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு – சண்டிகர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிஸ்ஸில் முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி 111 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில், தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் இன்று (ஜன.27) நடந்தது.
ஜெகதீசன், பிரதோஷ் பவுல் இணைந்து ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய பிரதோஷ் பவுல் சதமடித்தார். அணியின் ஸ்கோர் 278 ஆக இருந்தபோது 105 ரன்களுக்கு பிரதோஷ் பவுல் எல்பிடபிள்யூ முறையில் ஆர்பித்பானு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பாபா இந்திரஜித், ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். சிறப்பாக விளையாடிய பாபா இந்திரஜித் சதமும், ஜெகதீசன் இரட்டைச் சதமும் விளாசினர்.
அணியின் ஸ்கோர் 558 ஆக இருந்த போது பாபா இந்திரஜித் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜெகதீசன் முச்சதம் விளாசினார். அவர், 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5 சிக்சர்கள், 23 பவுண்டரிகளை அவர் விளாசினார். அதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் 126.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 610 ஆக இருந்தபோது, தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார்.
தொடர்ந்து 499 ரன்கள் பின் தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை சண்டிகார் அணி தொடங்கியது. அர்சலான் கான், ஹர்நூர் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக வந்தனர். 2 ஓவர்களின் முடிவில் அணியின் ஸ்கோர் 1 ஆக இருந்த போது 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (ஜன.28) நடக்கவுள்ளது.