திருவள்ளூர்: ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலமோசடி வழக்கில், பெண் ஒருவர் உட்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மனைவி சந்திராவுக்கு திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல், ஷோபா நகர், சகுந்தலா தெருவில் சர்வே எண் 512/1 ல் 8,742 சதுரடி இடம் உள்ளது. இந்தஇடத்தில் அடுக்குமாடி வீடு கட்டி தருவதாக அம்பத்தூர், டீச்சர்ஸ் காலனி, அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரவிசந்திரன் மனைவி மரகதமணி (55) என்பவர் ரூ.60 லட்சம் கொடுத்து பொது அதிகாரம் பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக சந்திரா தொடர்ந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 நீதிபதி ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மரகதமணி மற்றும்இந்த வழக்கில் தொடர்புடைய அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ரவிசந்திரன், கணேஷ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.