சென்னை: பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்த இளம் பெண் அடித்துத் துன்புறத்தப்பட்டதாக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில், “எனக்கும் நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் எம்எல்ஏ கருணாநிதி, “என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
புகார் என்ன? – உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின், மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும்,பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து வெளியே சொன்னால் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலையொட்டி ஊருக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோரிடம் நிலைமையைக் கூறி கதறி அழுதுள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்கள், தழும்புகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்த பெற்றோர், மகளை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அடுக்கடுக்காக குற்றச்சாட்டு: இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் ஊடகப் பேட்டியில், “எம்எல்ஏவின் மருமகள் என்னை மோசமாக தாக்கினார். தலைமுடியை வெட்டினார், கத்தியால் காயம் ஏற்படுத்தினார். என்னை வெளியேவிடாமல் அடைத்துவைத்து அதிக வேலை வாங்கினார். என் அம்மாவிடம் எதையும் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். மீறினால் தான் எம்எல்ஏவின் மருமகள் என்பதால் என் அம்மாவை போலீஸில் சிக்கவைத்துவிடுவேன் என மிரட்டினார்” என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.