மதுரை: மதுரையில் கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாளை இல்லம் தேடிச் சென்று அமைச்சர் உதயநிதி பாராட்டினார்.

மதுரை மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன் விபத்தில் இறந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஜனனி (வயது 30) 2 ஆண்டுக்கு முன்பு காலமானார். அவரது மகள் ஜனனி நினைவாக, பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள ரூ.1.52 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.

ஜனவரி 5-ம் தேதி பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இவரின் ஈகைச் செயலை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, கவுரவிக்கும் வகையில் அவருக்கு குடியரசு தின விருதும் அறிவித்துள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வங்கிக்கு சென்று பாராட்டினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு, நேரில் வந்து கவுரவிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க வருகை தந்த அமைச்சர் உதயநிதி, வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாளின் இல்லத்துக்கு தேடிச் சென்று அவருக்கு திருவள்ளுவர் சிலை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *