பூந்தமல்லி: காஞ்சிபுரம், மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூர், ஈ.வி.பிரபு அவென்யூ, ஏழாவது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (51).இவர் தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது அங்கு சமையல் பணி செய்து வந்த சிவப்பிரியா(35) அறிமுகமானார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்புதிருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை மாங்காடு காவல் நிலையத்துக்கு வந்த ஸ்ரீதர் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.
இதையடுத்து, ஸ்ரீதர் வீட்டுக்கு சென்ற போலீஸார், அங்கு கழுத்தில் டவலால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சிவப்பிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் தீவிர விசாரணை: தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், சிவப்பிரியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஸ்ரீதர் அடிக்கடி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும், நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் விளைவாக ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் டவலால் சிவப்பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீதர் வீட்டில் இருந்த மொபைல் போன் மாயமானதால், அந்த மொபைல் போனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சிவப்பிரியாவின் கொலைக்குவேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.