மதுரை : மாடக்குளம் கண்மாய் நிறைந்து 10 நாட்களாக மறுகால் பாயும் நிலையில் மதுரை மாவட்டத்தின் பழைய ஆயக்கட்டான 27ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு உபரித்தண்ணீர் செல்கிறது. கண்மாய் கரைகள் பலமாக இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைகையாற்றில் இருந்து கொடிமங்கலம் தடுப்பணை பகுதி ஆற்றுநீர் கால்வாய் வழியாக மாடக்குளம் கண்மாயில் நிரப்பப்படுகிறது. கொடிமங்கலத்தில் இருந்து கீழமாத்துார், துவரிமான் கண்மாய்கள் நிரம்பிய நிலையில் மாடக்குளம் கண்மாயும் முழுக் கொள்ளளவான 167 மில்லியன் கனஅடியை எட்டியது.
கடந்த 10 நாட்களாக நீர் நிறைந்துள்ள நிலையில் கொடிமங்கலத்தில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெள்ள உபரிநீர் கண்மாய்க்கு வருவதால், மடை திறக்காமல் ஏற்குடி அச்சம்பத்து பகுதி மாடக்குளம் கண்மாயின் மறுகால் வழியாக உபரிநீர் கிருதுமால் நதிக்கு அனுப்பப்படுகிறது.
இங்கிருந்து தண்ணீர் பெறும் சிந்தாமணி கண்மாய் 95 சதவீதம் நிரம்பியுள்ளது. இதன் மூலம் 500 ஏக்கர் பாசனம் நடைபெறும். சிந்தாமணி பிரிவில் சாமநத்தம் கண்மாய் நிறைந்தால் கிருதுமால் கால்வாய் மூலம் ராமநாதபுரம் அபிராமம் வரை உபரிநீர் செல்லும்.
மாடக்குளம் கண்மாய் முழுக்கொள்ளளவை எட்டியநிலையில் கரை பலவீனமாக இருப்பதாக நீர்வளத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கண்மாய் கரைகள் பலமாக உள்ளன. தண்ணீர் வரத்து குறைந்திருந்த நிலையில் ஒருசிலர் கண்மாயை ஆக்கிரமித்து 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திருந்தனர்.
பயிர்கள் மூழ்கியதால் தவறான தகவலை தெரிவிக்கின்றனர். நிலையூர் கால்வாய் வழியாக நீர் நிரம்பும் கண்மாய்கள் உட்பட மதுரையின் பழைய ஆயக்கட்டு வழியாக 46 கண்மாய்கள் நிரம்பி 27 ஆயிரம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)