ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.
தமிழ்நாட்டில் பிறந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் மற்றும் தொழில் காரணங்களுக்காகவும் உலகமெங்கும் உள்ள நாடுகளில் குடியேறி இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயலகத் தமிழர்கள் தினத்தை முன்னிட்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து பேசினார்.