![WhatsApp_Image_2024-01-12_at_12](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2024/1/12/original/WhatsApp_Image_2024-01-12.jpeg)
பென்னாகரம் அருகே டவர் அமைக்கும் பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் மூன்று மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.கோடுபட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோடுபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொலைத்தொடர்பு பிரச்சனையின் காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஏ.கோடுபட்டி பகுதியில் இருந்து பவளந்தூர் வரை பிஎஸ்என்எல் டவர் அமைப்பதற்கான சாலை ஓரத்தில் அகழிகள் அமைக்கப்பட்டு ஒயர்கள் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஏ.கோடுபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் முறையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக பதில் தெரிவிப்பதாகவும், முறையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பென்னாகரம் – தாசம்பட்டி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன், ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி ஆகியோர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், குழாயினை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில், குழாய் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சீரான குடிநீர் விநியோகிக்ககோரி நடைபெற்ற சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…