சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஸின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அ.தி.மு.க மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. யார் விருப்பப்பட்டாலும் ராமர் கோயிலுக்கு செல்லலாம். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன். உடல்நல பாதிப்பு இருப்பதால், அதை பொறுத்துதான் முடிவு செய்வேன்.

அ.தி.மு.க-வை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு நடைபெறவில்லை. தலைமைக் கழக அறிவிப்புக்குப் பிறகு, யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ விண்ணப்பிக்கலாம். கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம்.

சென்னையில் மழை பாதிப்பு இருந்தது, பெரிதளவு காற்று ஏற்படவில்லை. இதனால் மரங்களும் சாயவில்லை. கனமழையால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். சென்னை மாநகரில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி முழுமையாக ஏற்படுத்தி உள்ளதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மழை பாதிப்பால் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்படி நிலைமை இருக்க, தி.மு.க அரசாங்கம் பொய்யான செய்தியை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி மாநாட்டில் சென்று கலந்துகொண்டார். இதை பார்க்கும்போது ஆட்சி அதிகாரம்தான் தேவைப்படுகிறது. ஓட்டுபோட்டு தேர்வு செய்த மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கமாக உள்ளது. அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு தெரிவிக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாவது நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள், அதையும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது. பல்வேறு வலியுறுத்தலின் அடிப்படையில் அனைவரும் பணிக்கு திரும்பியிருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

போக்குவரத்து தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்கள்மீது எந்தவித அக்கறையும் செலுத்தாமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக போக்குவரத்து துறையில் 22,000 பேருந்துகள் உள்ளது. ஆனால் 16,000 பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. 5,000 பேருந்துகள் பழுதடைந்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 3,456 பேருந்துகளில், 2,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 850 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. தி.மு.க அரசு ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து மானிய கோரிக்கை வரும்போது, 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறது.

ஆனால் மின்சார பேருந்துகள் இதுவரை வரவில்லை. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பி-எஸ் 6 வகை டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்வதாக கொள்கை விளக்க குறிப்பில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு பேருந்துகூட வாங்கவில்லை. இதுதான் தி.மு.க ஆட்சியின் அவலம். எங்கு பார்த்தாலும் பழுதடைந்த பேருந்துகள்தான் இயங்கி வருகிறது. போக்குவரத்துத்துறையில் நிர்வாகத்திறன் இல்லாத அரசாக செயல்படுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் அனைத்து மகளிரும் கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிர் பயணிக்கும் சூழல் உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று, செயல்படுவது வேறு. இரட்டை வேடம் போடும் அரசுதான் தி.மு.க அரசு.

முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம்போட்ட எந்தெந்த தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவங்கியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேள்வி எழுப்பிருந்தேன்.

ஆனால் இதுவரை வெளியிடவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக்கூட தி.மு.க அரசாங்கத்தில் நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது விளம்பரத்திற்காக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதாக மக்கள் மத்தியில் எண்ணம் எழுகிறது.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 அறிவித்தோம். ஆனால், இந்தாண்டு தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகை மட்டுமே அறிவித்தார்கள். பரிசுப் பணம் குறித்து வலியுறுத்தி, அ.தி.மு.க அறிக்கை வெளியிட்ட பிறகு, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்றால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன், பரிசுத்தொகையும் வழங்க வேண்டும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *