![தூத்துக்குடி கருத்தப்பாலம் பகுதியில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர். thuthukudi](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2024/1/12/original/thuthukudi.jpg)
தூத்துக்குடி கருத்தப்பாலம் பகுதியில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை மத்தியக் குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 20, 21 ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்தனர்.
இக்குழுவினர், முதலாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோருடன் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: கலப்புத் திருமணம் செய்த பெண் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!
தொடர்ந்து, இரு பிரிவுகளாக, ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கருத்தப்பாலம் ஆதிபராசக்தி நகர், ஓம் சக்தி நகர், மாப்பிள்ளையூரணி, அத்திமரப்பட்டி, புன்னகாயல், பழைய காயல், அகரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மற்றொரு குழுவினர் மறவன் மடம், முறப்பநாடு, பேரூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொள்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…