சமீபகாலமாக கல்விப்பணிக்காக அல்லாமல் சர்ச்சைகளுக்காக மட்டுமே… சேலம் பெரியார் பல்கலையின் பெயர் ஊடகங்களில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று செமஸ்டர் தேர்வில் கேள்வி கேட்டது, பட்டமளிப்பு விழாவுக்கு கறுப்பு மற்றும் அதுசார்ந்த நிற உடைகளை அணியத் தடைவிதித்தது, பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காதது, பெரியார் தொடர்பான நூல்களை வெளியிட்டதற்காக பேராசிரியர் ஒருவருக்கு மெமோ அனுப்பியது என்று தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டன. இத்தனைக்கும் காரணம் அதன் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன்தான் என பெரியாரிய அமைப்புகளும், பா.ம.க., வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நேரத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, அதற்குப் போட்டியாக புதிய கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன்மீது குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் இளங்கோவன், சமீபத்தில் சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
![சேலம் பெரியார் பல்கலைக்கழகம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F96ff6f4a-46b8-449c-9d70-4add75bacbe7%2F132074_thumb.jpg?auto=format%2Ccompress)
அதில், “துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக `புட்டர்’ எனும் (PUTER – Periyar University Technology Entrepreneurship and Research Foundation) அறக்கட்டளை நிறுவனத்தைத் தொடங்கி, மோசடி செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், சாதி வன்கொடுமை, ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, கடந்த டிசம்பர் 26-ம் தேதியன்று துணைவேந்தர் ஜெகநாதனைக் கைதுசெய்தனர். ஆனால், அடுத்த நாளே அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.