ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய பா.ஜ.க அரசு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு, ‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும்’ என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
![ஜம்மு காஷ்மீர்](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-12%2Fbaa5d463-74c6-4498-9516-a38749cc41c6%2FWhatsApp_Image_2023_12_11_at_16_21_14.jpeg?auto=format%2Ccompress)
அந்தத் தீர்ப்பு விவாதங்களை கிளப்பியது. மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கலாம், அதை யூனியன் பிரதேசமாக மாற்றலாம் என்ற நிலை ஆபத்தானது என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. குறிப்பாக, பிரபல சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்தனர்.