பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்துள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா, நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது. இந்திய பேட்டிங் ஆர்டரின் டாப் ஐந்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

அணிக்கு ஓப்பனிங் செய்த ரோகித் சர்மா – ஷுப்மன் கில் கூட்டணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய கில் 51 ரன்களில் முதல் விக்கெட்டாக வெளியேறினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை கடைபிடித்த ரோகித் சர்மா 61 ரன்களிலும், விராட் கோலி 51 ரன்களிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதன்பின் ஸ்ரேயஸ் ஐயரும், கேஎல் ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

29வது ஓவரில் இணைந்த இக்கூட்டணி கடைசி ஓவர் வரை நிலைத்து ஆடியது. இருவருமே நெதர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்க இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 46வது ஓவரில் உலகக் கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஸ்ரேயஸ் ஐயர். அதேபோல் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசி 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் கேஎல் ராகுல். என்றாலும் அதே ஓவர் முடிய ஒரு பந்துக்கு முன்னதாக 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ராகுல். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது. ஸ்ரேயஸ் ஐயர் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து 128 ரன்கள் குவித்தார்.

நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *