செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அந்த நாளில்தான் தொடங்கப்பட்டது.

எம்ஜிஆர் – அண்ணா

இந்த நிலையில், 1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் அண்ணா, தான் பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கோரியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று திராவிட இயக்கங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனால், தி.மு.க-வோ வழக்கத்துக்கு மாறாக `கப்சிப்’பென இருக்கிறது. இந்த நிலையில்தான், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அ.தி.மு.க., அண்ணாமலையின் அவதூறு கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகிறது. இதற்கு பதில் கூறுவதாக அண்ணாமலை பேசிய பேச்சு, கூட்டணிக்குள் மீண்டும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக அண்ணா குறித்தோ, பெரியார் குறித்தோ பா.ஜ.க-வின் அவதூறு கருத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் அமைதியாக இருந்துவரும் அ.தி.மு.க., அண்ணா குறித்து அண்ணாமலையில் பேச்சுக்கு மிகக் கடுமையான கண்டனங்களைப் பேசிவருவதும் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி சந்தித்துவிட்டு வந்த மறுநாளே, பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளை அ.தி.மு.க தலைவர்கள் பேசுவதும் அரசியல்ரீதியாகப் பல்வேறு கோணங்களை விரிவுபடுத்துகிறது.

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

இது தொடர்பாக அ.தி.மு.க-வின் சீனியர் அமைப்புச் செயலாளர்களிடம் பேசினோம். “எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க-தான் சீட் பங்கீட்டைப் பேசும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க தலைமையில் கூட்டணி என்பதால், சீட்டை இறுதிசெய்யும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். `ஒரே நாடு, ஒரே தேர்தல்’, கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டுமென்று டெல்லியிலிருந்து வந்த அழைப்பை ஏற்று, செப். 14-ம் தேதி எடப்பாடி டெல்லிக்குப் பயணப்பட்டார். அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து மேற்படி விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படிதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வழங்கப்பட்ட ஐந்து சீட்டுகளை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்றும், தொகுதிப் பங்கீட்டை இப்போதே இறுதிசெய்தால், தேர்தல் பணியாற்ற வசதியாக இருக்கும் என்றும் அமித் ஷா தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக தொகுதிப் பங்கீட்டை செய்தால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு, தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி மறுத்துவிட்டார். மேலும், `அ.தி.மு.க-வில் எந்தப் பிளவும் இல்லை. தினகரன், ஓ.பி.எஸ்-ஸை இணைக்க வாய்ப்பும் இல்லை’ என்று அமித் ஷா தரப்பிடம் விளக்கிவிட்டு, சென்னைக்குத் திரும்பினார் எடப்பாடி.

அண்ணாமலை

நிலைமை இப்படியிருக்க, தமிழக பா.ஜ.க-வோ, அதிமுக-விடம் 20 சீட்டுகள் கேட்கப்பட்டதாகக் கிளப்பிவிட்டது. இதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேபோல, அம்மா மறைவுக்குப் பின்னர், கட்சியின் கொள்கைககளுக்கு அடித்தளமாக இருக்கும் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்டாட நாங்கள் தவறிவிட்டோம். இது அரசியல்ரீதியாகவும் கொள்கைரீதியாகவும் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவைத் தந்துவிட்டது. இதைச் சரிசெய்ய வேண்டுமென்றுதான் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட எடப்பாடி திட்டமிட்டார். அதற்காகத்தான் செப். 14-ம் தேதி டெல்லிக்குச் சென்ற எடப்பாடி, செப், 15-ம் தேதி அதிகாலையில் பயணம் செய்து சென்னைக்குத் திரும்பினார்.

இந்த நேரத்தில்தான் அண்ணா குறித்து அவதூறுக் கருத்துகளை அண்ணாமலை பேசியதை அ.தி.மு.க கையில் எடுத்தது. தலைமையிடமிருந்து வந்த அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப். 15-ம் தேதியே பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணமாலைக்குக் கண்டனம் தெரிவித்தார். அதேபோல அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். நாங்கள் எண்ணியதுபோலவே, அண்ணா மீது அண்ணாமலை அவதூறு செய்வதை தி.மு.க வேடிக்கை பார்க்கிறது.

சி.வி.சண்முகம்

உண்மையில் கூட்டணி விவகாரத்தில் முரண்பட்டு நிற்பது அண்ணாமலைதான். பா.ஜ.க தலைமை எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பதால்தான், கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்கிறது. இது அண்ணாமலைக்குப் பிடிக்கவில்லை. தான் முன்னிலை ஆகவில்லை என்ற விரக்தியில் இப்படி ஏதாவது பேசுகிறார். முன்புபோல இனி எங்களால் அண்ணாமலையைச் சகித்துக்கொள்ள முடியாது. கூட்டணி வேண்டாமென்று முடிவில் இருப்பது அண்ணாமலைதான். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதைத்தான் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணியில் இன்னும் பல அரசியல் அதகளங்கள் அரங்கேறும்போல் தெரிகிறது!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *