பெரியகுளம்: பெரியகுளத்தில் ஒரே சமூகத்தினரின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் வடகரை ஆய்வாளரின் ஜீப், 108 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலை முதல் இரவு வரை பால்குடம் எடுத்தல், ஊர்வலம், அஞ்சலி என்று ஒவ்வொரு தரப்பினும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிலையில், இரவு 10 மணிக்கு டி.கள்ளி்ப்பட்டி மற்றும் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிச்சட்டி எடுத்தபடி மேளதாளத்துடன் ஆடியபடி வந்தனர். அப்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இந்த இரு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதில் போட்டி ஏற்பட்டது.