
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.
அந்தப் பகுதியில் ஆக்கிரமித்து மீன் கடைகளை மாநகராட்சி அகற்றி ஏப்.18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் இணைந்து மெரீனா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, மாநகராட்சி அதிகாரிகள்- மீன் வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைகளை அகற்றுவதைக் கண்டித்து மீனவா்கள், பொதுமக்கள் சாலையில் அமா்ந்தும் மீன்களை தரையில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை சமாதானப்படுத்தினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறும்போது, மீன் விற்பனை அங்காடியை திறக்காமல் மீனவா்களின் கடைகளை மாநகராட்சி அப்புறப்படுத்துகிறது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றனா்.