திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்குழந்தையின் தாயிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
களக்காடு அருகே கட்டார்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30). இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (28). கடந்த 7 நாட்களுக்கு முன் இசக்கியம்மாள் பெண் குழந்தை பெற்றெடுத்தார். நேற்று அதிகாலையில் ரமேஷ் ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட்டார். காலையில் இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அங்கு ள்ள கிணற்றில் குழந்தை யின் சடலம் கிடப்பது நீண்ட நேரத்துக்குப்பின் தெரிய வந்தது. இது குறித்து களக்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்குவந்து குழந்தையின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையை இசக்கியம்மாள் கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கு பிறந்த ஆண் குழந்தை, பிறந்த 20 நாட்களிலேயே தொட்டிலில் இறந்து கிடந்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.