பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆகம விதிமுறையின்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழில் வேத மந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதை தமிழ் ஆர்வலர்லகள் கொண்டாடி வருகிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-07/900ae8bc-8cce-4166-8f33-360864493b63/p40.jpg)
கரூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கில், “தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகின்ற 27-ம் தேதி குடமுழுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் வேத மந்திரங்களை தமிழில் ஓதுவதுதான் முறை. தமிழில் வேத மந்திரங்கள் ஏராளம் உள்ளன. ஏற்கனவே தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடந்தபோது தமிழில் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என்றும் அதே நடைமுறையை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கும் பொருந்தும். ஆனால், பல கோயில் குடமுழுக்கு விழாக்களில் வேத மந்திரங்கள் சமஸ்கிருதத்தில்தான் ஓதப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ் ஓதுவார்கள் ஒரு பகுதியில் மட்டுமே மந்திரம் ஓத அனுமதிக்கப்பட்டார்கள். எனவே பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் அனைத்து பூஜைகளிலும் வேத மந்திரங்கள் சமஸ்கிருத்துக்கு இணையாக தமிழில் ஓதப்பட உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-11/1441e3fc-d3a5-4477-86d0-f476b1d23d84/high_court.jpg)
இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் விசாரித்தபோது, அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, “குடமுழுக்கு விழாவில் திருப்புகழ், திருமறைகள் உள்ளிட்ட தமிழ் வேத மந்திரங்கள், பாடல்கள் பாடுவதற்கு ஓதுவார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் ஆகம விதிமுறையின்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் குடமுழுக்கு விழா நடைபெறும்” என்றார்.
தமிழ் மொழியை சிறப்பாக பயன்படுத்தப் போவதாக உறுதி அளித்து, குடமுழுக்கு அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையினர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
“நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி பழநி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கில் தமிழ் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை கோயில் நிர்வாகத்தினர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்திரவிட்ட நீதிபதிகள் வருகின்ற 30 -ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.
இது குறித்து வழக்கு தாக்கல் செய்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரனிடம் பேசினேன், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தின் முதன்மையான தமிழ்க்கடவுள் முருகனின் கோயிலான பழநி கோயில் குடமுழுக்கில் தமிழில் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆரம்ப காலத்தில் அங்கு தமிழில்தான் வழிபாடு நடந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில்தான் மாறியுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-07/d5599624-1faf-4b91-89dd-d7270b68bd60/tamil_rajenthiran_advocate___5_.jpg)
தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற தொடர்ந்து வலியுறுத்தினோம். அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்தும் முறையிட்டோம். அதைத்தொடர்ந்துதான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்றுள்ளோம்.
இதற்காக பலரும் பாராட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புதுச்சேரியில் வசிக்கும் பாவேந்தர் பாரதிதாசனாருடைய பேரன் கோ.செல்வம் என்னை அழைத்து பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தஞ்சை பெருவுடையார் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றேன். தற்போது பழநி கோயிலிலும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இந்த தீர்ப்பபு குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பித்து. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் முறையாக நடத்தப்படவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/a577a665-cbd7-4e6f-b0d0-af982ae6f750/51458_thumb.jpg)
இச்சூழலில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே, பழநி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சம்ஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.