சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2022-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு  ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, கடந்த 20.12.2021 அன்று  போக்குவரத்துத்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அவற்றின்படி பொங்கல் இயக்கம் சிறப்பாக நடைபெற அனைத்து எற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு 16.01.2022 அன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாறுதல் செய்து பொங்கலுக்கு பின்பு 16.01.2022 முதல் 18.01.2022 வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 17.01.2022 முதல் 19.01.2022 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16.01.2022 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் 16.01.2022 அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பொங்கல் முடிந்து 15.01.2022 அன்று தொலை தூரங்களில் இருந்து சென்னை வரும்  பேருந்துகள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரயில் மூலமாக தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *