டெல்லி :

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில், இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியது நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று வரை (350வது நாள்) 144.45 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேபோல் முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கு வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ‘முன்னெச்சரிக்கை’ தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் (2007ம் ஆண்டிலோ அதற்கு முன்போ பிறந்தவர்கள்) நாளை (ஜன. 1) முதல் ‘கோவின்’ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத் துறை சமீபத்தில் அறிவித்தது. சிறார்கள், தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாரை வைத்து கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் ஜன. 10ம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடப்படும். அவர்கள் 2வது தவணை போட்ட தேதியிலிருந்து 9 மாதங்களுக்கு (39 வாரங்கள்) பிறகு இந்த முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோர் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இவர்கள் தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு நேரடியாகச் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அவர்களுக்கான 3வது தடுப்பூசி குறித்த விபரங்கள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும். சிறார்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கான வழிகாட்டுதலின்படி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து வருகின்றன.

தமிழகத்தை பொருத்தமட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி வரும் இன்று முதல் தொடங்கியது. அதேபோல், தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 9 லட்சத்து 78 பேருக்கும் ஜனவரி 10ம் தேதி முதல் ‘முன்ெனச்சரிக்கை‘ டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *