ஊட்டி:

நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனி பொழிவு அதிகரித்திருந்த நிலையில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக ‘0’ டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. நீலகிரியில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மோலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கியுள்ளன. தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை, கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மலை காய்கறிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது தாவை, கோத்தகிரி செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் நேற்று காலை உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் ‘1’ டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது.

தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற பகுதிகளில் வெப்பநிலை ‘0’ டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. நேற்று காலை பனி கொட்டி கிடந்ததால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளித்தது. சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல், அதனை கண்டு ரசித்தனர். பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *