பரமக்குடி:

பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மற்றொரு ஆசிரியரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெருமாள்கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியராக ஆல்பர்ட் வளவன், சமூக அறிவியல் ஆசிரியராக ராமராஜ் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 7ம் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ஆசிரியர்கள் ஆல்பர்ட் வளவன், ராமராஜ் ஆகியோர் மீது 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் சிலர் புகார் செய்தனர். இருவரும் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்கின்றனர், இரட்டை அர்த்தத்தில் பேசுகின்றனர், அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுகின்றனர் என மாணவிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழுவினர் கடந்த வாரம் மாணவிகளிடம் விசாரணை செய்தனர். இதில் 13 மாணவிகள், ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் புகார் செய்தார். இதையடுத்து ஆசிரியர்கள் காமராஜ், ஆல்பர்ட் வளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆசிரியர் ராமராஜை கைது செய்தனர். மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *