மதுரை:

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ் (43). இவர் சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இவர் தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ, விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை மாரிதாஸ் வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரை போலீஸார் கடந்த 9ஆம் தேதி அவரை கைது செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக 2020-இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *