விழுப்புரம்;

விழுப்புரத்தில் கண்டமங்கலம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட குற்றவாளி ஆவார். அதுவே அவர் சிக்குவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மீது இதேப்போன்று 4 கொலை வழக்கு மற்றும் 3 நெக்ரோபிலியா வகை பிணத்துடன் உறவுக்கொள்ளும் வழக்குகள் உள்ளதாக விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

தாய்-மகள் கொடூரக்கொலை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே வசித்த சரோஜா(80) அவரது மகள் பூங்காவனம்(60) ஆகியோர் நேற்று முன் தினம் (7/12) கலித்திராம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் மர்மமான முறையில் ரத்தக்கறையுடன் இறந்து கிடந்தனர். நகைக்காக தாய் மகளை கொலை செய்து குற்றவாளி தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நெக்ரோபிலியா கொலையாளி

குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளி இரு பெண்களையும் கொலை செய்தபின்னர் அவர்கள் உடலுடன் உறவு கொண்டது தெரியவந்தது. இது நெக்ரோபிலியா எனும் வகை ஒருவித மனநோய். இப்படிப்பட்ட மன பாதிப்புள்ளவர்கள் கொலை செய்தபின்னர் பிணத்துடன் உறவு வைப்பது அல்லது தாக்கி காயமுற்று மயங்கி கிடப்பவர்களை வன்புணர்வு செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். இவர்களை நெக்ரொபிலியாக்கள் என்று அழைக்கிறார்கள்.

தனிப்படை போலீஸாரின் புத்திசாலித்தனம் சிக்கிய கொலையாளி

இந்த இரட்டைக்கொலையிலும் கொலையாளி அவ்வகை நெக்ரோபிலியாவாக இருக்கலாம் என பிரபு தலைமையிலான தனிப்படையினர் கண்டறிந்தனர். பின்னர் அதே கோணத்தில் வழக்கை நகர்த்தி இதற்கு முன்னர் இதேப்போன்று கொலையோ, கொலை முயற்சியோ செய்து பாலியல் வன்கொடுமை அல்லது பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா கொலையாளி யாராவது இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரித்த போது திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள ஒட்டகங்கள் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கவிதாஸ் அத்தகைய குணமுள்ள நெக்ரொபிலியா கொலையாளி என்பது தெரியவந்தது. உடனடியாக கவிதாஸை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலையாளி கவிதாஸ் என அவனிடம் நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தினர். அவனிடமிருந்து கொள்ளையடித்த எட்டு கிராம் தங்க நகையையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கொலையாளி கைது செய்யப்பட்டது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் மற்றும் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று குற்றவாளி கவிதாஸிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் செய்தியாளரிடம் கூறியதாவது:

தாய் மகளைக்கொன்று உறவு கொண்டப்பின் நகைகளுடன் ஓட்டம்

கண்டமங்கலம் பகுதியில் தாய் மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுனர்கள் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் தாய் மகளை தடியால் தாக்கி கொலை செய்து அவர்கள் இறந்த பின்னர் அவர்களுடைய பிரேதத்துடன் உறவுக்கொண்டுள்ளான். பின்னர் 8 கிராம் நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கவிதாஸ் இதேபோல் வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்மணிகளை குறிவைத்து அவர்களை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடித்து மேற்படி நபர்கள் இறந்த பிறகோ அல்லது அவர்கள் மயக்கமுற்ற நிலையில் இருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்யும் குணாதிசயம் (நெக்ரோபிலியா) உடையவர் என தெரிய வந்துள்ளது.

கொலை செய்து பிணத்துடன் உறவு

மேலும் இதே போன்று கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்களை தாக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்கள் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதேப்போன்று விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் கவிதாஸ் மீது 4 கொலை வழக்குகள் 3 பாலியல் வன்புணர்வு (நெக்ரோபிலியா) வழக்குகள் இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரின் சிறப்பான முயற்சியை பாராட்டினார்.

நெக்ரோபிலியா கொலையாளிகள்

நெக்ரோபிலியா என்பது பிணத்தை விரும்புவது எனப்பொருள்படும். பிணத்துடன் உறவுக்கொள்ளும் ஒருவகை மன வியாதி உள்ளவர்களை இப்படி அழைக்கிறார்கள். இவர்கள் சாதாரணமாக நம்முடன் வாழ்பவர்கள் தான். இதில் பல வகையினர் உண்டு. இதில் கவிதாஸ் குற்றச்செயல்களுடன் கூடிய நெக்ரோபிலியா குற்றவாளி ஆவார். இதேப்போன்று சென்னையில் நெக்ரோபிலியா குற்றவாளிகள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *