பெட்ரோல் காருக்கு டீசல் போட்ட ஊழியர் – பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த கார்
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் காருக்கு டீசல் போட்டுள்ளனர் அதனை அகற்றும் போது ஏற்பட்ட விபத்தில் கார் பற்றி எரிந்தது.
காரைக்குடியில் பெட்ரோல் பங்கில் கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஊஞ்சனை புதுவயலை சேர்ந்த பாண்டியன் (62) என்பவர் தனது பேரனுடன் ஹோண்டா அமேஸ் காரில் தேவகோட்டைவாரச் சந்தைக்கு காய்கறி வாங்குவதற்காக வந்துள்ளார். திருப்பத்தூர் – காரைக்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியரிடம் பெட்ரோல் போட கூறியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணிபுரியும் பெண்மணி பெட்ரோல் போடுவதற்கு பதிலாக ரூ 1,500 டீசல் போட்டுள்ளார்.

பெட்ரோல் கார் என்பதால் டீசலை எடுப்பதற்காக காரின் உரிமையாளர் மெக்கானிக்கை அழைத்து எடுக்கச் சொல்லி இருக்கிறார். டீசலை எடுத்துக் கொண்டிருக்கும்போது பேட்டரியில் இருந்து தீப்பொறி பறந்து உள்ளே விழுந்தது. இதில் திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த பாண்டியனும் அவருடைய பேரனும் தப்பி ஓடினர்.

உடனடியாக தேவகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இதில் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது பெட்ரோல் பங்கில் தீப்பிடித்ததால் தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *