மே 10-ம் தேதி அன்று அட்சய திருதியை வந்திருக்கிறது. இந்த நாளில் பலரும் தங்கத்தை நகையாகவோ, நாணயமாகவோ வாங்கியிருப்பார்கள். இதன் மூலம் கடந்த ஆண்டில் அவர்களிடம் இருந்ததைவிட சில கிராம் அல்லது சில பவுன் தங்கம் அதிகமாகச் சேர்ந்திருக்கும்.

உலக அளவில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தற்போது தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. கடந்த 10 – 15 ஆண்டுகளாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்து வந்த மத்திய வங்கிகள், கடந்த 2022-ல் மட்டும் 1,082 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 100% அதிகம்.

இது ஒரு பக்கமிருக்க, சீனாவும் கடந்த 17 மாதங்களாக தனது தங்கக் கையிருப்பை அதிகரித்துள்ளது. சீனாவின் முக்கியமான வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா, கடந்த 2022-ல் 62.1 டன் அளவுக்கு வாங்கியது. ஆனால், 2023-ல் 224.88 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கிக் குவித்தது. தவிர, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 27.06 டன் தங்கத்தை வாங்கியிருக்கிறது.

உலக வங்கிகள் எல்லாம் குறிப்பிடத்தகுந்த அளவில் தங்கம் வாங்கிக் கொண்டிருக்கும்போது நமது ரிசர்வ் வங்கி மட்டும் சும்மா இருக்குமா? இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே 19 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு முழுக்க வெறும் 16 டன் தங்கத்தை மட்டுமே வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2022-ம் ஆண்டு 34 டன் வாங்கியது. 2009-ம் ஆண்டில் 200 டன் தங்கத்தை வாங்கியதற்குப் பின், இப்போதுதான் அதிக அளவில் தங்கம் வாங்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

உலகமே இப்படி ஏகமனதாக தங்கம் வாங்கிக்கொண்டிருக்க, மக்களும் தங்களின் எதிர்காலத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவர் தற்போது முதலீடு செய்ய விரும்பும் மொத்தத் தொகையில் 10% முதல் 20% வரை தங்கத்தில் முதலீடு செய்து நீண்ட காலத்தில் பணவீக்கத்தை ஈடுசெய்கிற மாதிரியான வருமானத்தைப் பெறலாம்.

இப்படி வாங்கும் தங்கத்தைத் தேவை இருந்தால் மட்டுமே நகையாக, அணிகலன்களாக வாங்கலாம். 10 முதல் 20 பவுன் தங்க நகை கைவசம் இருக்கிறது எனில், மேற்கொண்டு வாங்கும் தங்கத்தை இ.டி.எஃப் திட்டம் மூலம் காகிதத் தங்கமாகவோ (Paper gold), தங்கப் பத்திரமாகவோ வாங்கலாம். இதன்மூலம் தங்க முதலீட்டை இலகுவாகவும் லாபகரமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவசர காலத்தில் தங்க நகையை அடமானம் வைத்து சமாளிக்கிற மாதிரி, இ.டி.எஃப் திட்டத்தில் உள்ள காகிதத் தங்கத்தையும் அடமானம் வைத்து பணம் பெற்று நிலைமையைச் சமாளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

கஷ்ட காலத்தில் ஆபத்பாந்தவனாக இருக்கும் தங்கத்தை உரிய அளவில் நம் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கத் தவறக்கூடாது என்பதை அனைவரும் கட்டாயம் உணர்ந்து செயல்பட வேண்டும்!

– ஆசிரியர்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *