அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்துவரும் பெண் ஒருவர், தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்த பின்னரும், 211 பேருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் அந்தப் பெண், கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை, அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்திருக்கிறார். எனினும் அதை அலட்சியப்படுத்திய அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளில் 211 ஆண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். மேற்கு வர்ஜீனியா எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு ஓஹியோவில் உள்ள சிறிய நகரமான மரியெட்டாவின் மார்க்கெட் தெருவில் அந்தப் பெண் இத்தகைய தொழிலில் ஈடுபட்டு, பலருடன் பாலியல் உறவு வைத்து வந்திருக்கிறார்.
இதனால் ஃப்ளோரிடா முதல் ஓஹியோ வரையிலான கிழக்கு கடற்கரை முழுவதும், ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டவர்களின் நிலைமையைக் கண்டறிய, அதிகாரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
“இந்தப் பிரச்னை புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை எங்கும் எங்கும் நீடிக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களை நாங்கள் அணுகுவோம். அவர்கள் யாரும் சிக்கலில் இல்லை, இது ஒரு பொதுச் சுகாதார விழிப்புணர்வு. இது மோசடி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வாஷிங்டன் ஷெரிஃப் அலுவலகத்தின் துணை தலைமை அதிகாரி மார்க் வார்டன் கூறியுள்ளார்.