ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, இந்திய “சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்’ புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளானாது வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதியின் படி, இனி யாரும் ஓட்டுநர் உரிமம் பெற, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை. தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலேயே ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனைகளில் ஈடுபடலாம். தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சோதனைகளை நடத்துவதற்கும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்குமான தரச்சான்றிழ்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வழங்கும்.
இந்த விதி மாற்றமானது, ஓட்டுநர் உரிமம் பெறும் செயல்முறையை எளிதாக்குவதோடு, ஆர்.டி.ஓ-க்களின் பணிச்சுமையையும் குறைக்கின்றது. மேலும், ஓட்டுநர்கள் எளிதாக ஓட்டுநர் உரிமம் பெற வழிவகை செய்கிறது. அதேசமயம் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்களது பெற்றோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விதிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
தனிநபர் வாகன ஓட்டிகளுக்கான விதிமுறைகள்:
1. ஓட்டுநர் உரிமம் பெற ஆர்.டி.ஓ செல்வது கட்டாயமில்லை. ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் தன் விருப்பத்திற்கேற்ப தனக்கு அருகில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் ஓட்டுநர் சோதனையில் ஈடுபட்டு, ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அரசானது தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அதற்கானச் சான்றிதழை வழங்கும்.
2. சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை 1000 ரூபாயில் இருந்து, 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களது பெற்றோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் ரத்துச் செய்யப்படும். மேலும் அந்தச் சிறுவர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்படமாட்டார்.