பெங்களூரு: மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட்ராமண கவுடாவின் சொத்து மதிப்பு ரூ.633 கோடி எனவும், பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி எனவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் 4ம் முறையாக காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது டி.கே.சுரேஷ் தனக்கு ரூ. 338.87 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.593.04 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து, ரூ. 254.17 கோடி ஆக உயர்ந்துள்ளது.
டி.கே.சுரேஷ் பெயரில் ரூ.210.47 கோடி மதிப்பிலான நிலமும், ரூ.211.91 கோடி மதிப்பிலான வணிக கட்டிடங்களும் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ரூ.51 கோடியாக இருந்த முதலீடு, பங்கு, பத்திரம் ஆகியவற்றின் மதிப்பு 188 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.150.05 கோடியாக உள்ளது.
மலைக்க வைக்கும் மண்டியா வேட்பாளர்: இந்நிலையில் மண்டியா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெங்கட்ராமண கவுடா தனது சொத்து மதிப்பு ரூ.633 கோடி என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தொழிலதிபரான தனக்கு ரூ. 267.05 மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன் மனைவி குஷூமா பெயரில் ரூ.329.32 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்ணனைவிட குறைவு தான்: டி.கே.சுரேஷின் அண்ணன் டி.கே.சிவகுமார் நாட்டிலே பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.1,413 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதே போல வெங்கட் ரமணாவின் அண்ணனும் கவுரிபிதனூர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான புட்டசாமி கவுடா தனக்கு ரூ.1267 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.