கன்னட நடிகர் அம்பரீஷ், மண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா காங். சார்பில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுமலதா, இந்த தேர்தலில் பாஜகவிடம் சீட் கேட்டார்.
பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த சுமலதாவை கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திராவும், குமாரசாமியும் சந்தித்து ஆதரவு கோரினர்.
இந்நிலையில் சுமலதா கூறியதாவது: நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸில் எனக்கு மரியாதை இல்லை. எனவே விரைவில் பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கிறேன்.
பாஜக எனக்கு மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர், பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகளை அளிக்க முன்வந்தது. ஆனால் என் கணவரின் சொந்த தொகுதி யான மண்டியாவை விட்டு செல்ல மனமில்லை. இவ்வாறு கூறினார்.