இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்று பெருமையாக கூறும் மத்திய அரசு, புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாட்டிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்.
![புதுச்சேரி இந்தியா கூட்டணியினர்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2Fad5330ad-e48d-44cb-b889-975ca48b4eb7%2FWhatsApp_Image_2024_04_02_at_4_29_40_PM.jpeg?auto=format%2Ccompress)
ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? அரிசிக்கு பதிலாக பணம் வழங்குகிறோம் என்று கூறி, ஒரு கிலோ அரிசிக்கு ரூ.18.50 கொடுக்கின்றனர். அதை வைத்துக் கொண்டு ஒரு கிலோ அரிசியை வாங்கிவிட முடியுமா ? சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.50 விற்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதா ? புதுச்சேரியில் நடப்பது எதுவும் சரியில்லை என்பது முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும். ஆனால் வேறு வழியின்றி அவர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இதைப் பார்க்கும்போது, `செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து…’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.