பெங்களூரு: ஐபிஎல் தொடரின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குயின்டன் டி காக் 5 சிக்சர்களை விளாசி 81 ரன்களை குவித்தார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோவின் ஓப்பனர்களாக குயின்டன் டி காக் – கேஎல் ராகுல் களமிறங்கினர். டி காக் ஒருபுறம் பந்துகளை பறக்கவிட, கிளென் மேக்ஸ்வெல் வீசிய 6ஆவது ஓவரில் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் விக்கெட்டானார்.
மார்கஸ் ஸ்டாயினிஸ் 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிகாக் அணியின் ஸ்கோரை உயர்த்தி நம்பிக்கை கொடுத்தார். 56 பந்துகளில் 81 ரன்களை குவித்திருந்த டிகாக்-கை 17வது ஓவரில் வெளியேற்றினார் ரீஸ் டாப்லி.
அதன்பிறகு களத்துக்கு வந்த ஆயுஷ் பதோனி டக்அவுட். கடைசி கட்டத்தில் சீறிய நிக்கோலஸ் பூரன் 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி மிரட்டினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் தனது 100வது சிக்சரை எட்டினார்.
19வது ஓவரில் 2 சிக்சர்ஸுடன் பூரன் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 181 ரன்களைச் சேர்த்தது. பூரன் 40 ரன்களுடனும், கிருணல் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், முஹம்மது சிராஜ், ரீஸ் டாப்லி, யஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.