கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை 183 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது தமிழக அணி.
கோவையில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணியானது சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சில் 77.1 ஓவரில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் சேர்த்தார். கெவின் ஜிவ்ரஜனி 0, ஷெல்டன் ஜாக்சன் 22, சேதேஷ்வர் புஜாரா2, அர்பித் வசவதா 25, தர்மேந்திரசிங் ஜடேஜா 0, ஷிராக் ஜானி 0, பர்த் பூட் 13, ஜெயதேவ் உனத்கட் 1, யுவராஜ்சிங் தோடியா 0 ரன்களில் நடையை கட்டினர். பிரேரக் மன்கட் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 5 ரன்களில் ஷிராக் ஜானி பந்தில் போல்டானார்.
நாராயண் ஜெகதீசன் 12, சாய் கிஷோர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது தமிழக அணி.