ஆனால், அவர்களாலும் ஆறுதல் மட்டுமே கொடுக்க முடிந்தது. விக்கெட் அழுத்தத்தால் அஸ்வினும் இறங்கி வந்து தன்னுடைய விக்கெட்டை அள்ளி கொடுத்துவிட்டு சென்றார். தங்களின் வழக்கமான ஆட்டத்தையும் ஆட முடியாமல் அதிரடி ஆட்டத்தையும் ஆட முடியாமல் இடையில் சிக்கிக்கொண்டதுதான் இந்தியாவின் பிரச்சனை. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு இந்த பிரச்சனை இருந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங்,பௌலிங் இரண்டிலுமே தங்களின் வலு என்னவோ அதை மட்டுமே பற்றிக் கொண்டு ஆடினர். பௌலிங்கில் ஸ்டம்பு டூ ஸ்டம்பாக முழுமையாக டைட்டாக வீசிக்கொண்டே இருந்தனர். பேட்டிங்கிலும் அதிரடிதான். ஆலி போப் நின்று நீடித்து தன்னுடைய கரியரின் சிறந்த ஆட்டத்தை ஆடி 196 ரன்களை அடித்திருந்தார்.
இதே ஆலி போப் கடந்த முறை இந்தியா வந்திருந்த போது 8 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 154 ரன்களைத்தான் அடித்திருந்தார். 8 இன்னிங்ஸ்களில் 6 முறை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்திருந்தார். அஸ்வின் போப்பின் விக்கெட்டை சொல்லி சொல்லி எடுத்தார். ஆனால், இந்த முறை முதல் போட்டியிலேயே போப் அசத்திவிட்டார். ‘பேட்டர்களுக்கு கிரிக்கெட் ஆட கடினமான களங்களில் இந்தியாதான் முதன்மையானதாக இருக்கும். இந்தத் தொடருக்கு முன்பாக என்னிடம் அதிக நேரம் இருந்தது. நிறைய பயிற்சி செய்தேன். என்னுடைய டெக்னிக்குகளை கொஞ்சம் மாற்றிக் கொண்டேன்.