ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான க்ளென் மேக்ஸ்வெல் மதுபோதையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவருக்கு சில மணி நேரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்த உடனேயே மேக்ஸ்வெல் வீடும் திரும்பிவிட்டார்.
ஆனாலும் இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இது குறித்து மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 6 -ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்டி ஓடிஐ தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்கெனவே ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவிருக்கும் டி20 தொடரில்தான் அவர் களமிறங்குவார். அதற்கிடையில்தான் இப்படி ஒரு சர்ச்சை. மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்குச் சென்றாலும் உடனே டி20 போட்டிகளுக்கான பயிற்சிகளிலும் மேக்ஸ்வெல் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.