ஜனவரி 19 முதல் ஜனவரி 31 வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை என நான்கு மாநகரங்களில் 6வது கேலோ இந்தியா தொடர் நடைபெறவிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே இந்தத் தொடரை மிக முக்கியமான தொடராக பார்க்கின்றன.
2018 முதல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. “விளையாடு இந்தியா’ என்பதுதான் ‘கேலோ இந்தியா’ என்பதன் தமிழ் பொருள். இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பங்கேற்க வைக்கும் விதத்திலும் அவர்களுக்கு தேசியளவில் ஒரு வெளிச்சத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கும் வகையிலேயே இந்தத் தொடர் தொடங்கப்பட்டது.
![Khelo India Inauguration | கேலோ இந்தியா தொடக்கவிழா](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-01%2F9eff9108-5196-4998-8f9a-9aedbe6df44e%2FIMG_20240120_WA0023.jpg?auto=format%2Ccompress)
“இளைஞர்களின் வாழ்வில் விளையாட்டு ஒரு மையமாக இருக்க வேண்டும். விளையாட்டுதான் இளைஞர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும். பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தத் தொடரை தொடங்கவில்லை. விளையாடுதலை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கேலோ இந்தியாவைத் தொடங்குகிறோம்.”
2018-ல் டெல்லியில் நடந்த முதல் கேலோ இந்தியா தொடரின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மோடி பேசியவை இவை.
டெல்லி, மகாராஷ்ட்ரா, அசாம், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற 5 மாநிலங்களில் இதுவரை கேலோ இந்தியா தொடர் நடந்திருக்கிறது. முதல் முறையாக இப்போதுதான் தென்னிந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறவிருக்கிறது. முக்கியமான எல்லா விளையாட்டுப் போட்டிகளையும் குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்துவதுதான் தற்போதைய மத்திய அரசின் வழக்கமாக இருக்கிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஐ.பி.எல், உலகக்கோப்பை என எதுவும் இதற்கு விதிவிலக்காக இல்லை.