அடிலெய்டு: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டு நகரில் நடைபெற்று வந்தஇந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள்அணி 188 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 283 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 35.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோஷுவா டி சில்வா 18, அல்சாரி ஜோசப் 16, குடகேஷ் மோதி 3, ஷாமர் ஜோசப் 15 ரன்களில் நடையை கட்டினர். ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
26 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.