புதுடில்லி,மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக நம் நாட்டில் பலரும் அறிவித்துள்ள நிலையில், ‘மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள்’ என, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு சீனர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இது பெரும் கொந்தளிப்பை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கிண்டல்

மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக, பல பிரபலங்களும், சுற்றுலா அமைப்பாளர்களும் அறிவித்துள்ளனர். லட்சத்தீவில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கு, மாலத்தீவுகள் அமைச்சர்கள், கிண்டல், கேலி செய்தனர்.

நம் நாட்டு மக்களின் கொந்தளிப்பை அடுத்து, அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம். அமைச்சர்களின் கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என, மாலத்தீவுகள் அரசு சமாதானப்படுத்த முயன்றது.

ஆனாலும், மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் நம் நாட்டில் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு, ‘தொழில் ரீதியாகவும் மாலத்தீவுகளை புறக்கணிப்போம்’ என, கூறியுள்ளது.

நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும், அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாலத்தீவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

மாலத்தீவுகளுடன், எவ்வித தொழில், வர்த்தக உறவும் கூடாது என, வர்த்தகர்கள் மற்றும் ஏற்று மதியாளர்களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சுற்றுலா தான், மாலத்தீவுகளின் முக்கிய வருவாய் ஈர்க்கும் தொழில். இந்தியாவின் புறக்கணிப்பால், அந்த நாடு கதிகலங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு சுற்றுலா வரும் பயணியரில், இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.

கடும் கண்டனம்

இந்தியர்கள் புறக்கணிப்பு, தன் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய இடியாக அமையும் என்பதை, மாலத்தீவுகள் புரிந்து கொண்டுள்ளது.

இதையடுத்து, அமைச்சர்களின் பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக, மாலத்தீவுகள் சுற்றுலா தொழில் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, சீனா சென்றுள்ள மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு, சீனர்கள் அதிக எண்ணிக்கையில் மாலத்தீவு சுற்றுலா வர கோரிக்கை விடுத்துஉள்ளார்.

உள்நாட்டிலும் போர்க்கொடி

மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என, நம் நாட்டில் கோஷம் எழுந்துள்ள நிலையில், அங்கும் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கப்பட்டுள்ளது. சீன ஆதரவு அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவுகள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,யான அலி ஆசிம், அதிபர் பதவியில் இருந்து முய்சு உடனடியாக விலக வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார்.தேவைப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தாஜா செய்யும் எம்.பி.,

மாலத்தீவுகள் ஆளும் கூட்டணியில் உள்ள எம்.பி.,யான ஜாகித் ரமீசும், சமூக வலைதளத்தில் மோடி குறித்து விமர்சித்திருந்தார்.இந்நிலையில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பிறந்த நாள் வாழ்த்து கூறி, சமூக வலைதளத்தில் நேற்று அவர் பதிவிட்டுள்ளார். ‘இந்த ஆண்டில் உங்களுக்கு அனைத்திலும் வெற்றியும், சிறப்பான துாதரக முயற்சிகளும் நடக்க வாழ்த்துகள்’ என, அதில் ஜாகித் ரமீஸ் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *