வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சியோல்: கடும் எதிர்ப்புக்கிடையே தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அரசு எடுத்துள்ள திடீர் முடிவை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அரசின் முடிவை வரவேற்றும், நாய்க்கறி உண்பதை நிரந்தமாக தடை செய்ய வேண்டும் என பிராணி நல ஆர்வலர்கள் கடந்தாண்டு டிசம்பரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இன்று ( 09.01.2024) நடந்த பாராளுமன்ற கூட்ட தொடரின் போது நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 208 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர்.இதையடுத்து மசோதா நிறைவேறியது. இச்சட்டப்படி இனி நாய்கறியை சட்டவிரோதமாக விற்றால், மூன்றாண்டு சிறையும் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்துள்ளதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் தென்கொரி்ய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement