புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோரை பிக்பாக்கெட் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பான விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லிஉயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரின் இந்த பேச்சு நல்லபண்புடன் இல்லை என்று கூறியநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த விஷயத்தை இனிமேலும் நிலுவையில் வைத்திருக்கவிரும்பவில்லை என்றும்,இதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக கடந்த நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி 26-ம் தேதிக்குள் பதிலளிக்க கோரியது.இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி பதிலளிக்க தவறியதால் தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க அனுமதி இல்லை என்று ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே மோடி என்று பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருக்கின்றனர் என்று ராகுல் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.