2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது.
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா ஐந்து கோப்பைகளை வென்றிருக்கின்றனர். ஆனால் ஆர்சிபி அணி 16 ஆண்டுகள் விளையாடியும் அவர்கள் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் ஆர்சிபி அணியின் ரசிகர் ஒருவர் ‘எங்க அணிக்கு வந்து கோப்பையை வென்று கொடுங்கள்’ என்று கேட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்சிபி ரசிகர் தோனியிடம், “ நான் தீவிர ஆர்சிபி ரசிகர். ஐந்து கோப்பைகளை நீங்கள் சிஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள். ஒரே ஒரு முறை ஆர்சிபி அணிக்காக கோப்பையை வென்று கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த தோனி, “ ஆர்சிபி மிகச்சிறந்த அணிதான். ஒவ்வொரு அணிக்கும் இருக்கும் பிரச்னை என்னவென்றால் சரியான திட்டமிடல் இல்லாததுதான். கோப்பையை வெல்லும் அளவிற்கு ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை வைத்துள்ளனர்.
ஆர்சிபி மட்டுமல்ல அனைத்து 10 அணிகளும் கோப்பையை வெல்லவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் கூட . ஆனால் எனது அணியை விட்டு விலகிவந்து மற்றொரு அணி கோப்பை வெல்வதற்கு நான் உதவினால், என்னுடைய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்.
அவர்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா? இது எல்லாவற்றிற்கும் மாறாக எனது அணியிலேயே இன்னும் சரிசெய்ய வேண்டிய நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன” என்று தோனி கூறியிருக்கிறார். தோனியின் இந்த பதிலைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள் தோனியை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.