இந்திய – சீன எல்லைப் பகுதியில் இருக்கும் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தாலும்கூட, சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையால் பதற்றமான சூழலில் இருக்கும் மாநிலம் அது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு `தெற்கு திபெத்’ எனப் பெயர் மாற்றம் செய்தது சீனா. சீனாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. அப்போது பா.ஜ.க அரசு, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவுடனே இருக்கும் என்ற வார்த்தையை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-01/a115e88f-61fb-4397-9cd0-97148286fd65/arunachal_pradesh_3875150_1280.jpg)
இந்த நிலையில், சீனாவின் இயற்கை வள அமைச்சகம், நேற்று, சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கும் தைவானையும், தென்சீனக் கடலின் பெரும்பகுதியான, சர்ச்சைக்குரிய Nine Dash line எல்லைக் கோடையும் சீனா சொந்தம் கொண்டாடியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது என இந்தியா கருத்து தெரிவித்திருக்கிறது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சினாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-10/e2b06cf2-4853-411d-974d-9789f35cff04/Modi_1.jpg)
இந்த நிலையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த மத்திய பா.ஜ.க அரசின் பிரதமர் மோடிக்குத் தைரியம் இருக்கிறதா… இந்த விவகாரத்தைப் பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். சமீபத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் (பிரிக்ஸ்) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது பிரதமர் மோடி சீன அதிகாரிகளைக் கைகுலுக்கிக் கட்டிப் பிடித்தார். இந்த நிலையில்தான் சீனாவிடமிருந்து இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நமது நாட்டுக்குள் சீனா நுழைந்துவிட்டது எனக் கூறியது சரிதான்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குறிப்பிட்டதுபோல, இந்த தேர்தலிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் போலியான நாடகத்தை அரங்கேற்றி எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு முன்னதாக கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் பக்தர்கள் ரயில்மீது கற்களோ, வெடிகுண்டுகளோ வீசப்படலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-04/1ca6516f-aae8-4b56-90f0-f398a601a326/sanjay_raut_d.webp)
நாடு முழுவதும் கலவரம் தூண்டப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அச்சம் முக்கிய அரசியல் கட்சிகளின் மனதிலும் இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் முன்னிலையில் வைப்பது எங்கள் வேலை. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஹரியானாவில் நடந்த அல்லது நடத்தப்பட்ட கலவரம் இதற்கு ஓர் உதாரணம்” எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY