புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அந்தக் குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை ஒன்றாக நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்த 2-ம் தேதி ஒரு குழுவை அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.