முதல் மூன்று ஓவரில் 43 ரன்கள் எடுத்து மிக அதிரடியான துவக்கத்தை பெற்றது சன்ரைசர்ஸ். அதன் பிறகு ஐந்தாவது ஓவரை வீச வந்த ரசல், அகர்வால் மற்றும் ட்ரிப்பாதி ஆகியோரை ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஓவரில் கூட சன்ரைசர்ஸ் 11 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிவில் 65 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ்.
பவர்பிளே முடிந்த பின்பு 5 ஓவர்களுக்கு எந்த ஒரு பவுண்டரியும் வரவில்லை. இரண்டே இரண்டு சிக்ஸர்கள் மட்டும்தான் வந்திருந்தன. அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்திருந்த ப்ரூக் ஸ்பின்னர்கள் வந்தவுடன் திணறிப் போனார். ஆனால் ஆட்டத்தை அப்படியே கொல்கத்தாவிடம் தாரை வார்க்க விரும்பாத கேப்டன் மார்க்ரம், சுயாஷ் வீசிய 12வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து அதிரடியை துவக்கினார். மீண்டும் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அடித்து 25 பந்துகளில் அரை சதம் கடந்து அவரிடமே அவுட் ஆனார் மார்க்ரம்.அதன் பிறகு களத்திற்குள் வந்தார் அபிஷேக் ஷர்மா. ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக கையாண்டார் இவர்.