வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்தின. அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத தாக்குதல் ஏற்படும் சூழலை தவிர்த்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
அவர் எழுதியுள்ள ‘ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். நான் நேசிக்கும் அமெரிக்காவுக்கான போராட்டம்’ என்ற புத்தகம்கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது. அதில் மைக்பாம்பியோ கூறியதாவது: அமெரிக்கா-வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தைக்காக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இரவு, வியட்நாம் தலைநகர் ஹனாய்-ல் தங்கியிருந்தேன்.
அப்போது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘‘பாலகோட் தாக்குதலுக்குப்பின், அணு ஆயுத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும், அதற்கு பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும்’’ கூறினார். ‘‘எதுவும் செய்ய வேண்டாம். ஒரு நிமிடம் தாருங்கள். பிரச்சினையை பேசி தீர்க்கிறேன்’’ எனநான் சுஷ்மா சுவராஜிடம் கூறினேன். உடனே, பாகிஸ்தான் ராணுவத்தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத்பஜ்வாவிடம் பேசினேன். அது உண்மையல்ல என அவர் கூறினார். அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமாதானம் செய்ய சிலமணி நேரங்கள் ஆனது. கொடூரமான நிகழ்வை தவிர்க்க, அன்று இரவு நாங்கள் செய்தது போல் வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.