பெனோனி: ஸ்காட்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 83 ரன் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. பெனோனியில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா (1), சோனியா மெந்தியா (6) ஏமாற்றினர். ரிச்சா கோஷ் (33) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய திரிஷா (57) அரைசதம் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. ஸ்வேதா (31), ஹரிஷிதா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 66 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. டார்சி கார்டர் (24) ஆறுதல் தந்தார். இந்தியா சார்பில் மன்னத் காஷ்யப் 4, அர்ச்சனா தேவி 3, சோனம் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஏற்கனவே தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்து ‘சூப்பர்–6’ சுற்றுக்குள் ஜோராக முன்னேறியது. இதில், ஆஸ்திரேலியா (ஜன. 21), இலங்கை (ஜன. 22) அணிகளை எதிர்கொள்கிறது.
Advertisement