பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, அண்மையில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இம்ரான் கான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால் பாகிஸ்தானின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைத்து விட்டது. இதைனையடுத்து இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில், இது தொடர்பாக இம்ரான்கான் வெளியிட்டுள்ள வீடியோவில், “பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. வெளிநாட்டில் நவாஸ் ஷெரீப் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருக்கிறார் என்பதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பாருங்கள்… வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பதைக் கூட பாருங்கள்” என்றார்.
அண்மையில், `இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்த நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கானது. ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை மற்றவர்களின் முன்னேற்றத்துக்கானது’ என இம்ரான் கான் இந்தியாவை பற்றி புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.