புதுடில்லி:

பெட்ரோல் மீதான வாட் வரியை டில்லி மாநில அரசு குறைத்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அதன் விலை லிட்டருக்கு ரூ.8 குறைகிறது.

கடந்த நவ.,4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. மத்திய அரசை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் வரிகளை குறைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் நிலையில், கடந்த 27 நாட்களாக, அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், டில்லி மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 19.40 சதவீதமாக குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைகிறது. இந்த உத்தரவு இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முடிவு முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தற்போது டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97 க்கு விற்கப்படும் நிலையில், நள்ளிரவு முதல் அதன் விலை ரூ.95.97 ஆக குறையும்.
டீசல் விலை ரூ.86.67 க்கு விற்கப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை உயர்வு

அதேநேரத்தில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது இன்று(டிச.,1) முதல் அமலுக்கு வருகிறது. 19 கிலோ எடை கொண்ட இந்த காஸ் விலை உயர்வு காரணமாக, அதன் விலை டில்லியில் ரூ.2,101க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *