ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்று ரிலையன்ஸ் – சவுதி அராம்கோ ஒப்பந்தம் தான். ஏனெனில் இந்த இருபெரும் ஜாம்வான்களின் கூட்டணியானது, இந்திய சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ரிலையன்ஸ் – சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு இடையிலான 15 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் நடப்பு ஆண்டிற்குள் முடிவடையலாம். இதன் மூலம் சவுதி அராம்கோவுக்கு 20% பங்குகளை ரிலையன்ஸ் விற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையானது, சமீப காலம் வரை வெறும் பேச்சு வார்த்தையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென அறிவித்தது.

 

காரணம் என்ன?

ஏன் என்ன காரணம்? எதற்காக இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இந்த இழுபறிக்கு என்ன காரணம் என்ற பல கேள்விகள் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தன. இது எண்ணெய் நிறுவனத்தின் மீதான மதிப்பாய்வு பற்றிய கவலையால் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

குறைந்த விலையில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி

ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் கீளின் பவர் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளுக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என அறிவித்திருந்தது. அந்த சமயத்தில் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் விதமாக ஹைட்ரஜன் ஒரு கிலோவுக்கு 1 டாலருக்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்பானி கூறியிருந்தார்.

 

அம்பானியின் மாஸ் திட்டம்

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய புதுபிக்கதக்க எரிசக்தி ஆற்றலை வழங்கும் மையாக மாறும். ஹைட்ரஜனில் கார்பன் உமிழ்வு என்பது இல்லை. ஆக கார்பன் உமிழ்வை குறைக்க தொழில் மற்றும் வாகனங்களில் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என அம்பானி அப்போது கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

 

கால நிலைக்கு ஏற்ப வணிக மாற்றம்

சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உலக நாடுகள் கார்பன் உமிழ்வை குறைக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் வரவேற்பை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அம்பானியின் கால நிலைக்கு ஏற்ப வணிக மாற்றமும், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு கெமிக்கல்

இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் நிறுவனமும், சவுதி அராம்கோவுக்கும் இடையேயான ஒப்பந்தம் நின்று போயிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் இனி ரிலையன்ஸ் சிறப்பு கெமிக்கல்கள் தயாரிப்புகளுக்காக, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தினை மேற்கொள்ளலாம் என பிசினஸ் டுடேவில் வெளியான தகவல்கள் கூறுகின்றன.

உலகின் மாற்றம்

தற்போது உலகமே எண்ணெய் மற்றும் புதைவடிவ எரிவாயுவிலிருந்து, புதுபிக்கதக்க பசுமை ஆற்றலுக்கு மாறி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் மதிப்பு குறையக் கூடும். இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் – சவுதி அராம்கோவின் பேச்சு வார்த்தை நின்று போயிருக்கலாம்.

 

எண்ணெய் வணிக மதிப்பு குறைப்பு

கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி, ரிலையன்ஸ்-ன் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் வணிகத்தின் மதிப்பானது 75 பில்லியன் டாலர் என ரிலையன்ஸ் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆலோசகர்கள் இந்த மதிப்பீட்டில் 10% குறைத்ததாகவும் தெரிகின்றது. இதே கோடக் இன்ஸ்டிடியூட் 61 பில்லியன் டாலர்களாக குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வியாபார கூட்டு நிறுவனம்

இதற்கிடையில் ரிலையன்ஸ் கோல்டுமேன் சாக்ஸிடமும், சவுதி அராம்கோ சிட்டி குழுமத்திடமும் ஆலோசனை பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியிருப்பினும் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், தற்போதும் இந்தியாவில் முக்கிய கூட்டு நிறுவனமாக சவுதி அராம்கோவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் நின்றுபோனாலும் இதனை விட அதிக முதலீடுகளை சிறப்பு கெமிக்கல் வணிகத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

 

தற்போதைய பங்கு விலை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது, NSEல் 2.48% குறைந்து, 2430.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே BSEல் தற்போது 2.53% குறைந்து, 2430 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2477.60 ரூபாயாகும். குறைந்த பட்ச விலை தற்போதைய நிலவரப்படி (11.50 மணி நிலவரப்படி) 2417.60 ரூபாயாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *